Monday, April 28, 2014

எனதன்னை ஈஸ்வரி!


சுப்பு தாத்தா அஞ்சு ராகங்களில் (த்விஜவந்தி, ஸஹானா, புன்னாகவராளி, சிந்து பைரவி, யதுகுல காம்போஜி) அஞ்சாமல் பாடியிருப்பதை நீங்களும் அஞ்சாம என்ஞாய் பண்ணிக் கேளுங்க! மிக்க நன்றி தாத்தா!



சுப்பு தாத்தாவுக்கு இந்த பாட்டு ரொம்பப் பிடிச்சிருச்சாம். அதனால மறுபடியும் த்விஜவந்தி, அடானா, ஸஹானா, மற்றும் தன்யாஸி ராகங்கள்ல பாடியிருக்கார்... கேட்டு மகிழுங்கள்!  மிக்க நன்றி தாத்தா!

அகிலாண்டேஸ்வரி
அலகில்லா ஈஸ்வரி
பரமனின் ஈஸ்வரி
பதமருள் ஈஸ்வரி!

ஆனைக்காவினில்
ஆண்டிடும் ஈஸ்வரி
ஆனைமுகத்தனை
ஈன்றிட்ட ஈஸ்வரி!

கந்தனை அணைத்திட்ட
கனியமு தீஸ்வரி
பந்தங்கள் அறுத்திடும்
பனிமலை ஈஸ்வரி!

விந்தைகள் புரிந்திடும்
வித்தகி ஈஸ்வரி
எந்தையின் இடப்புறம்
அமர்ந்திட்ட ஈஸ்வரி!

எனதுள்ளம் உறைந்திடும்
எழில்மிகு ஈஸ்வரி
ஏழுலகம் போற்றும்
ஏதமில் ஈஸ்வரி!

கனிவு மிகுந்தவள்
கண்மணி ஈஸ்வரி
எனதுயிரானவள்
எனதன்னை ஈஸ்வரி!


--கவிநயா

இங்கும் அந்த பாடல் ஒலி.
எங்கும் அந்த அன்னையின் ஒளி 

Monday, April 21, 2014

அந்நாள் என்று வரும்?


அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?
அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?

உன்பெயரைஉச் சரிக்கையில் என்கண்ணில்
கண்ணீர் என்றுவரும்?
உன்னெழில் வடிவை எண்ணும்பொழுதினில்
நெஞ்சம் என்றுருகும்?

உண்மை நீயன்றி வேறொன்றிலையென
என்மனம் என்றுணரும்?
நீயேசரணென பற்றிக்கொள்ளும் உறுதி
என்றைக்கு எனக்குவரும்?

அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?
அந்நாள் என்று வரும்? - அம்மா
நன்னாள் என்று வரும்?


-கவிநயா

Monday, April 14, 2014

என் அன்னை!

அனைவருக்கும் இனிய தமிழ் 'ஜெய' வருட வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!

 பெரீய்ய பாட்டு என்றாலும், சுப்பு தாத்தா மிகப் பொறுமையாகவும்,மிக அருமையாகவும்  பாடித் தந்திருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

('செந்தமிழ் நாடெனும் போதினிலே' மெட்டு)

என்அன்னை என்னுயிர்த் தாயேஉன்னைநான்
எண்ணி அனுதினம் வணங்குகின்றேன்
நீயேஎன் கதியென வந்து விட்டேன் - நான்
உன்னை நம்பி என்னைத் தந்து விட்டேன்

பளிங்கினால் மண்டபம் கட்டி வைத்தேன் - அதில்
பற்பல சிற்பங்கள் செதுக்கி வைத்தேன்
சுற்றுச் சுவரெல்லாம் உந்தன் பெருமைகள்
பேசும் ஓவியங்கள் வரைந்து வைத்தேன்

என்அன்னை நீ வந்து வீற்றிருக்க - ஒரு
தங்கச் சிம்மாசனம் அமைத்து வைத்தேன்
ரத்தினக் கற்களை இழைத்து வைத்தேன் - அதில்
அழகுப் பதுமைகளை நிறுத்தி வைத்தேன்

என்அன்னை நீகொஞ்சம் இளைப்பாற வேண்டி
உனக்கென அழகான ஊஞ்சல் செய்தேன்
பஞ்சு மெத்தை அதில் விரித்து வைத்தேன் - அதைப்
பட்டுப் பூக்களாலே அலங்கரித்தேன்

முத்துச் சரங்களால் கைப்பிடியாம் - இனிக்கும்
முத் தமிழாலே இசைப் பாட்டாம்
இதமாக ஆட்டிட மங்கையராம் - எந்தன்
அன்னை புகழ்பாடக் கூடுவராம்

அமிர்தத்தை ஒத்த அன்னை உனக்கு
பஞ்சா மிர்தத்தால் அபிஷேகம்
பால்போலத் தூய்மையாய் அன்பு செய்ய வேண்டி
பாலாலே குடங்குடமாய் அபிஷேகம்

தாயாகத் தன்மையாய் அன்பு செய்யும் உனக்கு
தண்மை யான தயிரில் அபிஷேகம்
தேவி உன்னுடைய இனிமை சொல்ல உனக்கு
இனிக்கும் தேனாலே அபிஷேகம்

பாவங்கள் யாவையும் போக்கிக் கரையேற்றிட
பலவித பழச்சாறால் அபிஷேகம்
மனச் சுத்தம் தந்திட வேண்டிக் கொண்டு...
சுத்த மஞ்சள் நீரால் அபிஷேகம்

என்அன்னை என்னுள்ளே மணம்பரப்பிடவே
மணக்கும் சந்தனத்தால் அபிஷேகம்
பிறவிப் பயனதை அடைந்திட வேண்டி
பன்னீரால் அன்னைக்கு அபிஷேகம்

சிவப்புச் சேலை கட்டி தேவி நீயும்
மிகச் சிங்காரமாகவே வீற்றிருக்க
செவ்வந்திப் பூக்களால் செய்த மாலை - உந்தன்
செம்மேனி யதனை அலங்கரிக்க

வைரங்கள் பதித்த கிரீடம் அது - உந்தன்
சென்னியைக் கர்வமாய் மகுடம் செய்ய
பிறைச் சந்திரனும் கூட வந்து அதன்
பக்கத்திலே நின்று அழகு செய்ய

கார்மேகம் தனைத்தந்த கருங்கூந்தல் - அது
அகிற்புகை மணத்திலே சுகித்திருக்க
பலவண்ண நறுமண மலர்கள் பலவும்
அன்னையின் பின்னலை அணிசெய்ய

செக்கச் சிவந்த சிந்தூரத் திலகம்
உன்னெழில் நெற்றியில் ஒளிர்ந்திருக்க
வில்லாக வளைந்த புருவங்கள் இரண்டும்
குனிந்து உன் பாதங்கள் பார்த்திருக்க

அஞ்சனம் எழுதிய அகன்ற விழிகள் - பொன்
வண்டுகள் போலவே சுற்றிவர
ஒற்றை மூக்குத்தி ஜொலிஜொலிக்க - சின்ன
நாசியைப் புல்லாக்கு அலங்கரிக்க

காதணிகள் காற்றில் அசைந்திருக்க - இரண்டு
கன்னமும் ரோஜாவாய்ச் சிவந்திருக்க
சிமிழ் போன்ற இதழ் சற்றே விரிந்திருக்க - அதில்
சின்னதாய்ச் சிரிப்பொன்று மலர்ந்திருக்க

சங்குக் கழுத்திலே தங்கத்தாலே செய்த
தகதகத்து மின்னும் அட்டிகையாம்
முத்து மணி கோர்த்த ஆரங்களாம் - நவ
ரத்தினங்கள் சேர்த்த மாலைகளாம்

தந்தத்தை மிஞ்சும் மென் கைகளிலே
சந்தம் பாடி வளைகள் கலகலக்க
விரல்நகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு
விரல்களில் மோதிரங்கள் பளபளக்க

கற்கள் பதித்திட்ட ஒட்டியாணம் - உந்தன்
சின்ன இடையினைத் தழுவி நிற்க
வெண்பஞ்சுப் பாதத்தில் கொஞ்சிக் கொஞ்சி - வெள்ளிச் 
சலங்கையும் மெட்டியும் கிணுகிணுக்க

என்அன்னை உன்னெழில் தோற்றந்தன்னை - என்ன
வென்று சொல்லி நானும் போற்றிடுவேன்
உன்மேல் நீங்கா அன்பு வேண்டுமென்றே - நாள்
தோறும் உன்னை நான் வேண்டுகின்றேன்!


--கவிநயா

Monday, April 7, 2014

நீ இலாத போது...



பின்னூட்டச் சுட்டியைத் தவிர, சுப்பு தாத்தா மற்றுமொரு ராகத்திலும் உருகிப் பாடியிருப்பதையும் கேளுங்கள்... மிக்க நன்றி தாத்தா!



நீ இலாத போது,
என் நினைவு எங்கு வாழும்?
நிழலைத் தேடி வாடி உந்தன்
அடிகள் நாடி ஓடும்
(நீ இலாத)

வானும் மண்ணும் போற்றும் அன்புக் கன்னி நீயன்றோ?
சூழும் துன்பம் ஓட்டும் எந்தன் அன்புத் தாயன்றோ?
(நீ இலாத)

வேதனையில் வேகும் போது சந்தனமாய் வருவாய்
சோதனைகள் தாங்க உந்தன் தோளிணைகள் தருவாய்
நாகம் சூடும் நாதனுடன் நாயகியே வருவாய்
பாதம் சூட ஏங்குகிறேன் பைங்கிளியே அருள்வாய்
(நீ இலாத)


--கவிநயா